Kutty Dhinushan Balaji

Tuesday, September 29, 2015

திருப்பதி பிரம்மோற்சவம்



 
இந்தியத் திருநாட்டிலேயே மிகப் பிரபலமானதும் செல்வச் செழிப்பு கொண்டதுமான திருக்கோயில் திருமலைதான். 
 
ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்தில் இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மாநில பக்தர்களையும் ஒருங்கே ஈர்க்கக்கூடிய ஒரு பெரிய புகழ் பெற்ற திருத்தலமாக இது திகழ்கிறது. 
 
ஏன் மேனாட்டினரையும் பக்தர்களாகக் கொண்ட தலம் இது! 
 
புரட்டாசி மாதம் என்றாலேயே திருமலையில் அற்புதத் திருவிழாதான். 
 
18.9.2015  வெள்ளிக்கிழமை அன்று பிறந்த புரட்டாசி மாதத்திலிருந்து அந்த உற்சவ உற்சாகத்தை அனுபவிக்க இப்போதே சில முன்னோடித் தகவல்கள்:
 
 
ஏழு மலைகள்: 
சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாச்சலம், விருஷபாசலம், நாராயணசலம், வெங்கடாசலம் என ஏழு மலைகளைக்  கொண்டதால் சப்தகிரி என்பர். 
 
சங்கம் மருவிய இலக்கியம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இத்தலத்தை ‘நெடியோன் குன்றம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
திருவிழா: 
 
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வருடம் முழுதும் திருவிழா என்றாலும் சிறப்பு விழா புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தான். 
 
இவ்விழாவை பிரம்மனே நேரில் வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம். 
 
பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள வெங்கடாஜல மகாத்மியத்தின் 14ம் அத்தியாயத்தில் திருவேங்கடமுடையான் பிரம்மனை நோக்கி தனக்கு உற்சவம் நடத்தி வைக்க ஆணையிட்டார். 
 
அதன்படி பிரம்மன் நடத்துவதுதான் இவ்விழா. இறைவன் கட்டளையை ஏற்று அதை தொண்டைமான் அரசனிடம் கூற பின் இருவரும் தேவ சிற்பியான விஸ்வகர்மா உதவியுடன் உற்சவத்தை விமரிசையாகக் கொண்டாட வெண் கொற்றக்குடை, சாமரம், ஆலவட்டம், பற்பல வாகனங்கள், திருத்தேர் போன்றவற்றை ஏற்பாடு செய்தனர். 
 
 
புரட்டாசி திருவோணம்: 
 
இந்நாள்தான் ஏழுமலையானின் அவதாரத் திருநாள். 
 
திருவோணத்திற்கு 9 நாட்களுக்கு முன்பாக நடைபெறும் திருவிழாதான் திருப்பதி பிரம்மோற்சவம். 
 
இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் பூரண ஆபரண அலங்காரங்களுடன் வீதியுலா வருவார். 
 
கி.பி. 66ல் இங்கு ஒருமுறை பிரம்மோற்சவம் நடந்தது என்றும், அதன்பின் புரட்டாசி மாதம் ஒருமுறையும், மார்கழி மாதம் ஒரு முறையும் இரு பிரம்மோற்சவங்கள் நடந்துள்ளதாகவும் இங்குள்ள கல்வெட்டில் காணலாம்.
 
 
பிரம்மோற்சவம்: 
 
பவித்ரோற்சவம் என்றால் புனிதப்படுத்துதல் என்று பெயர். 
 
அங்கு ரார்ப்பணம் செய்தபின் முதல் நாள் காலை கொடியேற்றம், மாலை பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வருவார். 
 
2ம் நாள் சிறிய சேஷ வாகனம், ஹம்ஸ வாகனம். 
 
3ம் நாள் சிம்ம வாகனம், முத்துப் பந்தல் வாகனம். 
 
4ம் நாள் கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், 
 
5ம் நாள் காலை மோகினி அவதாரம், மாலை கருட சேவை. 
 
இது மிகவும் சிறப்பான விழா. 
 
இதில் முக்கிய சிறப்புகள் உள்ளன. 
 
6ம் நாள் அனுமன் வாகனம், யானை வாகனம், 
 
7ம் நாள் சூரிய பிரபை, சந்திர பிரபை. 
 
8ம் நாள் காலை தேரோட்டம். மாலை குதிரை வாகனம், 
 
9ம் நாள் காலை சக்ரஸ்நானம், தீர்த்தவாரி, மாலை கொடியிறக்கத்துடன் விழா இனிதே நிறைவடையும். 
 
விழாவின் 5ம் நாள் உற்சவம், கருட சேவையாகும் இது 3 சிறப்புகளைக் கொண்டது: மூலவர் ஆபரணங்கள், ஆண்டாள் மாலை, குடைகள்.
 
 
மூலவர் ஆபரணம்: 
 
கருட சேவையன்று உற்சவருக்கு மூலவர் அணியும் அனைத்து ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். 
 
இவரை தரிசித்தால் மூலவரையே தரிசித்தது போலாகும் என்பர். 
 
பிரபலமான ஆபரணமான சாளக்கிராம தங்க மாலையும், லட்சுமி உருவம் பதித்த 108 தங்கக் காசுகளால் ஆன காசு மாலையை அணிவிப்பார்கள்.
 
ஆண்டாள் மாலை: 
 
ஆண்டாள் கண்ணனை திருமணம் செய்துகொள்ள மதுரை கள்ளழகரையும் வேண்டிக் கொண்டாள். 
 
அதனால் சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகருக்கும், புரட்டாசி பிரம்மோற்சவ 5ம் நாள் கருட சேவையன்று திருப்பதி, ஏழுமலையானுக்கும் ஆண்டாள் மாலையை ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து அனுப்பி வைப்பார்கள். 
 
கருட சேவையில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் மாலையை அணிந்த பின்பே சுவாமி உலா வருவார். 
 
இத்துடன் ஆண்டாளின் பட்டுப் புடவையும் கிளியும் சேர்ந்துகொள்ளும்.
 
 
குடைகள்: 
 
சென்னையில் சேவார்தி குடும்பத்தினர் ஆண்டு தோறும் திருப்பதிக்கு 2 பெரிய குடைகளும், 4 சிறிய குடைகளும் அனுப்பி வைப்பார்கள். 
 
பட்டுடை, கைத்தடி, மான் தோல், மாங்கல்யம் யாவையும் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து அத்துடன் குடைகளையும் பாத யாத்திரையாக திருப்பதிக்கு எடுத்துச் செல்வர். 
 
வழி யெங்கும் மண்டகப்படியும் நடத்துவார்கள். 
கருட சேவை நாளுக்குள் இவை திருப்பதி வந்தடையும். 
 
இக்குடைகளுடனேயே கருட சேவை நடைபெறும். பிரம்மோற்சவத்தில் மட்டும்தான் மூலவருக்கும் உற்சவருக்கும் விசேஷமான மாலைகளைச் சமர்ப்பிப்பார்கள்.
 
 
விசேஷ பூஜை: 
 
ஆலயம், ஆலயம் சார்ந்தோர், பக்தர்கள் என எல்லோரையும் பரிசுத்தமாகவே பவித்ரோற்சவம் செய்கின்றனர். 
 
பூஜை முறை, மந்திர உச்சரிப்பில்  தவறு, தோஷம் இவற்றையும், கோயிலுக்கு வருவோர் குணநலன், தீட்டு, வழிபாட்டு முறை தவறு இவற்றையும் போக்கி இறையம்சத்தை பூர்ணமாக்கவே இந்த உற்சவம் செய்கின்றனர். இதுவே இந்த உற்சவத்தின் நோக்கம்.
 
 
ரக்ஷாபந்தன்: 
 
உற்சவ காலங்களில் உற்சவ மூர்த்திக்கு மட்டுமே இதைக் கட்டுவர். 
 
ஆனால், பவித்ரோத்சவத்தில் மூலவருக்கும் உற்சவருக்கும் கட்டுவர். 
 
இதனால் பகவானே நேரடியாக இந்த உற்சவத்தை அனுஷ்டிப்பதாகக் கருதுகின்றனர். 
 
ரக்ஷாபந்தன் கட்டியபின் மூலவரின் ஸாந்நித்யத்தை உற்சவருக்கு ஆவாஹனம் செய்வார்கள். 
 
அதன்பின் யாக சாலைக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள். 
 
 
பின் பூஜைகள் நடக்கும். 
 
இப்பூஜைக்கு கணக்கும் உண்டு. 
 
ஆண்டுக்கு தினக்கணக்கில் 365 முறை செய்ய வேண்டும். 
 
சிலர் 180 முறையும், 90 முறையும் அல்லது மாதம் ஒன்று என 12 முறையும் இந்த பூஜை ஆராதனைகளைச் செய்வர். 
 
பவித்ரோற்சவத்தில் குறைந்தபட்சம் 12 முறையாவது இப்பூஜையை கண்டிப்பாக செய்ய வேண்டும். 
 
இதுவே இந்த உற்சவத்தின் முக்கிய நோக்கமாகும். 
 
 
பவித்ரோற்சவ நிறைவு நாள்: 
 
பூஜையன்று துவார தேவதாவிஸர்ஜனமும், மண்டல விஸர்ஜனமும் செய்தபின் மண்டல கர்ணத்தை உற்சவ மூர்த்தி திருவடிகளில் சமர்ப்பிப்பார்கள். 
 
இந்த உற்சவத்தை காண்போர் நிகரில்லா பெரும்பயனடைவர். 
 
 
திருப்பதி தரிசன சம்பிரதாயம்: 
 
203 பாசுரங்கள் பெற்றது திருப்பதி. இது 3 பிரிவுகள் கொண்டது. 
 
கீழ்க் காணும் வரிசையில் தரிசிப்பதுதான் சம்பிர தாயம். 
 
முதலில் கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளையும் அடுத்து திருச்சானூரில் அலர்மேல் மங்கைத் தாயாரையும் பின் மேல் திருப்பதியில் சுவாமி புஷ்கரணியருகேயுள்ள வராஹரையும் தரிசித்த பின்பே மூலவர் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய வேண்டும்.
 
 
கோயில் அமைப்பு: 
 
முதல் வாயிலை படிக்கரவலி என்பர். கோபுரத்தை அழகு செய்யும் வாசல் இது. 
 
முதற்பிராகாரத்தை கடந்தால் வெள்ளி வாயில், அதன்பின் தங்க விமானத்தில் விமான வெங்கடேசரை தரிசிக்கலாம். 
 
பின் துவாரபாலகர்களை தரிசித்து உத்தரவு பெற்றபின் கருவறைக்குச் செல்லலாம். 
 
முதலில் சாதாரணமாகக் கட்டப்பட்ட இந்த அனந்தபுரமான திருப்பதி, 13ம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. 
Posted by kuttybalaji at 6:10 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

World Counter

Flag Counter

About Me

kuttybalaji
View my complete profile

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  November (1)
  • ▼  2015 (2)
    • ▼  September (2)
      • திருப்பதி பிரம்மோற்சவம்
      • Kutty Balaji
  • ►  2014 (3)
    • ►  August (2)
    • ►  July (1)
  • ►  2013 (4)
    • ►  October (2)
    • ►  January (2)
  • ►  2012 (19)
    • ►  December (3)
    • ►  October (2)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  March (7)
    • ►  February (1)
Travel theme. Powered by Blogger.