Wednesday, June 20, 2012

சுத்தமான குடிநீர்

சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்

தனிமனிதன் ஒருவனுக்கு சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடப்படை உரிமையாக ஐக்கிய நாட்டு சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் வாழும் மனிதனின் சுகாதாரத்திற்கும் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. உலக அளாவிய தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விவாதித்தது. ஏற்கனவே 190 நாடுகள் ஒப்புதல் வழங்கிய சுத்தமான குடிநீர் வலியுறுத்தும் அடிப்படை உரிமை தீர்மானத்தை பொலிவியா முன்மொழிந்தது. இதில் 121 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டன.
இந்த தீர்மானம் மூலம் ஐ.நா.,வில் உள்ள உறுப்பினர் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இத்தோடு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு போதிய வழிகாட்டுதலையும் தெரிவிக்க ஐ.நா., பணி செய்யும் .
எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இது குறித்து ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங் கூறுகையில் ; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றார்.

நிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம்

இந்தியாவில் பல நகரங்கள், ஜீவநதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது.இந்தியாவில் இன்னும் பல நகரங்கள், சிறிய நதிக்கரைகளில் அமைந்துள்ளன; பல நகரங்கள், எந்த ஒரு நதிக்கரைகளிலும் அமையாமலும் உள்ளன.

இவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை, தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய சென்னை மாநகர மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து, கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.
ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.

உதாரணமாக, சின்னமலை பகுதியில் மூன்று அடி ஆழத்திலும், பெசன்ட் நகர் பகுதியில் 60 அடி ஆழத்திலும், ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.
மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள், மழைநீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

வாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:நிலத்தடி நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும், அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும், சென்னை மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்...
* ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.

* இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.

* அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து, இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.

ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

* மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து, தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

* ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்ப் பஞ்சம்



நீராபத்து, இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் விபரீத விபத்து என்றே கூறலாம். இப்போது கோடைக்காலம் தொடங்கியதும், மாநிலத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னை, இன்னும் சில ஆண்டுகளில் கோடைக்காலம், மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் இருக்கும்.

அந்த அளவுக்கு நம்முடைய சீர்கெட்ட குடிநீர் மேலாண்மையாலும், அதிகரிக்கும் குடிநீர்த் தேவையாலும் நீரை அத்தியாவசியப் பொருளாகப் பார்ப்பது மறைந்து, மருந்துப் பொருளாகப் பார்க்கும் காலம் விரைவிலேயே ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தமிழகம், குடிநீர் உள்பட அனைத்து நீர் தேவைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் உள்ளது. பருவமழை பெய்வதைப் பொறுத்துத்தான் நீர்நிலைகளும், ஆறுகளிலும் நீர் பெருகுகிறது. மாநிலத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. ஆகும். ஆனால், இந்த மழை அளவைத் தமிழகம் எட்டிப்பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே இந்த மழை அளவை சில ஆண்டுகள் எட்டிப்பிடித்தாலும் அப்போது ஏதாவது ஒரு பகுதியில் அழிவு மழையாகப் பெய்து, இருக்கின்ற எல்லாவற்றையும் கடலுக்கு அடித்துச் சென்று விடுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே அளவில் பெய்யாமல், ஏதோ ஒரு பகுதியில் அழிவு மழையாகவும் இதர பகுதிகளில் லேசாகவும் பெய்து வருகிறது.

இதனால் அண்மைக்காலமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.நாட்டில் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறி வரும் அரசு, நீர் மேலாண்மையில் இப்போதைய நிலைமை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குச் சென்றுவிடும்.

தமிழகத்துக்கு ஆண்டுக்கு 54,395 மில்லியன் கன மீட்டர் நீர் தேவையானதாக இருக்கிறது. இதே அளவில் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், 2050-ம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவை 57,725 மில்லியன் கன மீட்டராக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள தண்ணீர்த் தேவைக்கே, பக்கத்து மாநிலங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் தேவைப்படும்பட்சத்தில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆறு, அணை, குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளைக் கொண்டு, இப்போது தண்ணீர் தாகத்தைத் தமிழகம் தணித்து வருகிறது. மாநிலத்தில் சுமார் 39,202 குளங்கள் உள்ளன. இதில் மழையையும், ஆறுகளின் பாசனத்தையும் சார்ந்து மட்டும் தோராயமாக 20,104 குளங்கள் உள்ளன. குறிப்பாக மழையை எதிர்பார்த்து 80 சதவிகித குளங்கள் உள்ளன.
இக் குளங்கள் அனைத்தும் மன்னர் காலங்களில் வெட்டப்பட்டவை. போதிய பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் இவற்றின் நீர்ப்பிடிப்புத் தன்மை பெருமளவு குறைந்துள்ளது. இப்போது குளங்களில் நீர்ப்பிடிப்புத் தன்மை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் குளங்கள் மூலம் பாசனம் பெறும் பரப்பளவும் 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள குடிநீர் விநியோகமும்,விவசாயமும் சூதாட்டத்தைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.

மாநிலத்தில் முக்கியமாக 34 நதிகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து சுமார் 86 துணை நதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே உற்பத்தியாகி, தமிழகக் கடல்பகுதியில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணிதான். இந்த நதியைத் தவிர பெரும்பாலான முக்கிய நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்துக்குள் வரும் நதிகளாகவே இருக்கின்றன.

இப்போதுள்ள அரசியல்வாதிகளாலும், அரசுகளாலும் இந் நதிகளின் நீர்வளத்தை முழுமையாக நம்ப முடியாத சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளம் குறைந்து வருவதால், நீர்வளமும் குறைந்து வருகிறது.

÷மேலும், மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் மேடாகி வருவதால் அதிக அளவிலான நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான அணைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8 அணைகளில் 30 சதவிகிதமும், 2 அணைகளில் 50 சதவிகிதமும், 4 அணைகளில் ஒரு சதவிகிதமும் நீரைத் தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக  மணல் திருடர்களால், ஆற்று மணல் திருடுவது அதிகரித்துள்ளதால் மண்வளம் மட்டுமன்றி, நீர் வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் போக்கையே மாற்றிவிடும் அளவுக்குப் பகிரங்கமாக நடைபெறும் இந்தத் திருட்டால், ஆறுகளில் நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது.இவ்வாறு பல்வேறு காரணங்களால் வேகமாகக் குறைந்து வரும் நீர்வளத்தைப் பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அது கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் உள்ளது.

நீர்வளத்தைப் பெருக்காவிட்டாலும், இருக்கின்ற வளத்தையாவது காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மலைப் பகுதியில் வியாபார ரீதியான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆறுகள் மூலம் நடைபெறும் நீர் வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். நீர்நிலைகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மீது தனி அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளப்படுவதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்மேலாண்மையில் அரசு காலதாமதமோ, அலட்சியமோ செய்யும்பட்சத்தில், வரும்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

நீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி


நீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி

நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு,​​ நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் தொலைநோக்குத் திட்டமும் கலந்த பசுமைப் புரட்சி மீண்டும் ஏற்பட்டால்தான்,​​ தமிழகத்தில் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேலும் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லாமல் தடுக்க முடியும்.

​ ​ விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ள நாடுகள்,​​ ​ இதன் வளர்ச்சிக்கு சரியான திட்டங்களைச் செயல்படுத்தி,​​ அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து வளமிக்க நாடாக மாற்ற முயற்சிக்கும்.​ ஆனால்,​​ 75 சதவீத மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்தைக் காப்பதற்கு இப்போது உள்ள அரசுக்கும்,​​ இதற்கு முன்னர் இருந்த அரசுகளிடமும் தொலைநோக்குச் சிந்தனைகள் இல்லாமல் போனதால்,​​ இப்போது மீண்டும் ஒரு பசுமைப்புரட்சியைத் தமிழக விவசாயம் எதிர்நோக்கியுள்ளது.​ ​ ​

​ ​ 1960-க்குப் பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை.​ ​ இந்தப் பசுமைப் புரட்சி தமிழக விவசாயத்தில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவந்தது.​ இதன்பிறகு கிணற்றுப் பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது.

​ தமிழகத்தில் கடந்த 1951-ல் 14,751 பம்ப்செட்டுகள் இருந்தன.​ இது 1974-ல் 6,81,205 பம்ப்செட்டுகளாக உயர்ந்தன.​ இப்போது சுமார் 25 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளதாக விவசாய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

​ பசுமைப் புரட்சிக்குப் பின்னர் நிலத்தடி நீரின் பயன்பாடு பிரதானமாக்கப்பட்டது.​ ஏரி,​​ கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.​ ÷அந்தச் சமயத்தில்தான் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர்,​​ சந்தைப் பொருளாகியது.​ அப்போது இருந்த தமிழக அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ளவில்லை.​ ​

​ ​ பசுமைப் புரட்சிக்குப் பிறகு,​​ விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்தது.​ விவசாயத் தேவைக்கான இயற்கையான நீர் ஆதாரங்களை அதிகரித்துக் கொள்ளவோ,​​ நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்துக் கொள்ளும் சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவோ தமிழக ஆட்சியாளர்கள் முழு முயற்சி மேற்கொள்ளவில்லை.​ காவிரி,​​ முல்லைப்பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளில் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகள்,​​ இந்தப் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது.​ அரசியல் மாற்றங்களால்,​​ ஓர் அரசு மேற்கொள்ளும் கொள்கைக்கு நேர்எதிரான கொள்கையை மற்றோர் அரசு எடுக்கிறது.​ ​ விவசாயிகளின் நலன்களை மனதில் கொள்ளாமல்,​​ சுய லாபத்துக்காக அரசியல் கட்சிகளும் கருத்துகளில் முரண்பட்டு நிற்கின்றன.

​ ​ அரசு மணல் குவாரிகள் என்ற பெயரில் முக்கிய ஆறுகள் சிலவற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது.​ அரசு மணல் குவாரிகள் இல்லாத ஆறுகளில் அரசியல்வாதிகள்,​​ உள்ளூர் மக்கள் துணையுடன் மணல் கொள்ளை நடந்து வருகிறது.​ ​ இதனால் அந்தந்த ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவதால் விவசாயக் கிணறுகள் பெரும்பாலானவை வறண்டுவிட்டன.​ ஆற்றின் மூலம் நீரைப் பெறுகின்ற ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில்,​​ மணல் கொள்ளை மூலம் ஆற்றின் ஆழம் அதிகரிப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே ​ ஏரிகளுக்குத் தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.​ ​

​ ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால்,​​ வைகை மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலுள்ள சுமார் 25,000 ஏக்கர் நிலங்களின் நீர்ப்பாசனம் நேரடியாகப் ​ பாதிக்கப்பட்டுள்ளதாக,​​ நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ​ தெரிவித்துள்ளது.​ மேலும்,​​ காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் அதிக ஆழம் ஏற்படுவதால்,​​ ஆற்றின் நீரோட்ட வேகம் வெகுவாகத் தடைபட்டுள்ளதாகவும்,​​ இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

​ ​ ​ விவசாயத்துக்குப் போதுமான அளவில் நீர் ஆதாரம் இல்லை என்ற நிலை ஒருபுறமிருக்க,​​ இருக்கும் நீர் வளத்தையும் பாதுகாக்காமல் விட்டுவிட்டதால் ஆறுகள் அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.​ காவிரி,​​ அமராவதி,​​ நொய்யல்,​​ பவானி,​​ பாலாறு போன்ற நதிக்கரைகளில் அமைந்துள்ள ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேற்றும் ஆலைக்கழிவுகள்,​​ சுற்றுச்சூழல் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு,​​ நதிநீரும்,​​ நிலத்தடி நீரும் இந்த தலைமுறையே பயன்படுத்த முடியாத நிலைக்கு மாசுபடுத்திவிட்டன.​ ​ ​
​ ​ இதனால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை.​ சாகுபடி செய்யும் நிலங்களிலும் விளைச்சல் பெருமளவில் குறைந்து வருகிறது.​ இந்த ஆற்றுப்படுகைகளில் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள்,​​ ஆலைக் கழிவுகளால் விவசாயம் செய்ய முடியாத அளவுக்குப் பாழடைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.​ இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற விவசாயிகளின் குரல் மட்டும்,​​ ​ பல ஆண்டுகளாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.​ தேர்தலின்போதும்,​​ பட்ஜெட்டின் போதும் சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கோடிகளில் நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்புகள் அரசிடமிருந்து பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
​ விவசாயத்துக்கு மிக முக்கியத் தேவையாக உள்ள நீர் ஆதாரம் பாதுகாக்கப்படாததால்,​​ விவசாயம் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது.​ ​ கடந்த 30 ஆண்டுகளில் இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட பாதுகாப்பதற்கு ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான்,​​ இன்று அத்தியாவாசியப் பொருள்களை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.​ இதனால் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.​ ​ இனிமேலாவது,​​ ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டு,​​ எஞ்சியுள்ள விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு,​​ நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியை உடனடியாகத் ​ தொடங்க வேண்டும்.

ஒலி மாசுவின் விஸ்வரூபம்


வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஒலியற்ற வாழ்வை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில், ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். இதில், சப்தம், ஓசை, இரைச்சல், கூச்சல், உருமல் ஆகிய விதங்களில் வெளிப்படும் ஒலிகளில் எது மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறதோ அது ஒலி மாசாகக் கருதப்படுகிறது.

ஆனால், பெரும்பாலானோர் சப்தம் நம்மை என்ன செய்துவிடும் என்றே கருதுகின்றனர், அதிலும் இளைஞர்களின் விருப்பம் இவ்விஷயத்தில் மோசமாக உள்ளது.

அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தால் மின்னணு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.

ஆனால், ஒலி என்பது அமைதியாகக் கொல்லும் தன்மையுடையது என்பதை அவர்கள் உணரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளை நம் செவி ஏற்றுக்கொண்ட பின்னர், அதை நாம் புரிந்து செயல்பட மூளை துணை புரிகிறது.

அதேநேரத்தில் செவியால் குறிப்பிட்ட அளவுக்கு மேலான அதிர்வுகளைத் தாங்க முடியாது. அதாவது, 20 ஆயிரம் அதிர்வுகளுக்கு மேல் செவியால் கேட்க முடியாது, 120 டெசிபல் வரையிலான ஒலி அழுத்தங்களை மட்டுமே நன்றாகக் கேட்க முடியும். இதன் அளவு அதிகரித்தால் செவிகள் பாதிக்கப்படும்.

ஆனால், நமது கிராமங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியானாலும் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலியுடன் அதிக நேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம்.

இதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தால், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த ஒலி அளவை மீறியே பிறரிடம் பேசும் சூழலில், அவர்களது செவித்திறன் பாதிக்கப்படும்.

மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் ஆகியவை ஒலி மாசினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

ஒலி மாசைக் கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின்போதும் வெளியாகும் ஒலியின் அளவு, அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதுக்கு உள்பட்டோர்) ஒலி மாசு காரணமாக, கேட்புத் திறனை இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பணியாற்றிய பலரும், காது இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத் தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

மேலும், 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சல் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு செவிப்புல அயர்ச்சி ஏற்படுகிறது. நம் நாட்டில் சென்னை, கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள சாலையோர பழ வியாபாரிகள், ஓட்டுநர்களில் 40 சதவிகிதத்தினர் காது இரைச்சல் பற்றி முறையிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் ஒலி மாசினால் 10 சதவிகிதத்தினர் செவித்திறனை இழப்பதாகவும், ஏறத்தாழ 8 கோடி மக்கள் ஒலி மாசினால் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், 1000 பேருக்கு 35 பேர் எனும் விகிதத்தில் காது இரைச்சல் நோயால் பாதிப்படைவதாகவும் நம் நாட்டில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 10 சதவிகிதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவிகிதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்கவிடுவதில்லை. குறைவான ஒலியும் மூளையின் முக்கிய மையங்களைப் பாதித்து இயல்பான உறக்கத்தைக் குலைத்துவிடுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அதிக ஒலியையோ, எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும். எனவே, இரைச்சலைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆனால், இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்பதை நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து துக்க நிகழ்ச்சிகள் வரை தொடரும் பட்டாசு சப்தம் நம் காதுகளைப் பதம் பார்க்கிறது.

கனரக வாகனங்கள், பஸ்களில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போதாது என்று இரு சக்கர வாகனங்களிலும் தங்கள் பங்குக்கு பலவகை வினோத ஒலி எழுப்பும் மின்னணு ஒலிப்பான்களைப் பொருத்தி, பாதசாரிகளை மிரட்டி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.

இதைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒலி மாசுக் கட்டுப்பாடு சட்டத்தைத் திருத்தி விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்.

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவித குறுக்கீடுகளோ, இடையூறுகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒலி மாசால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை நமக்கு அளித்துள்ள சிறந்த ஒலி மாசுத் தடுப்பு சாதனமாகத் திகழும் மரங்களை சாலையோரங்களில் பெருமளவில் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒலி மாசு என்னும் அரக்கனை அழிக்க வேண்டும்.

Sunday, June 3, 2012

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்


கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.

சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.

பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.

இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.

நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.

நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)

நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின! தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!

Friday, June 1, 2012

புத்தர்



புத்தர் (கி.மு.563-கி.மு.483)

இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.

கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.

வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் " அறவொளி பெற்ற " ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.

புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் " நான்கு உயர் உண்மைகள்" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (" அணைதல் அல்லது அவிதல்" எனப் பொருள்படும்) " நிர்வாணம்" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் " எட்டு வகைப் பாதை" எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.

கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.

இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.

உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.

கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.